Wednesday, 16 November 2022

ஊக்கமது கைவிடேல்

 


*ஊக்கமது கைவிடேல்*

ஆயிரம் தோற்ற அபூர்வ மனிதர்/

பாயிரம் போற்றப் படைத்த புனிதர்/

சாய்தல் கண்டு சோர்ந்து போயின்/

ஓய்தல் ஒன்றே உறையுள் ஆகும்/


உள்ளிருந் துடைபடா உலகத் துயிர்கள்/

வெள்ளிடை மலையாய் வெற்றி காணா/

தெள்ளிய சிந்தனையும் தீர்க்க முடிவுமே/

துள்ளிய வெற்றியைத் துவளாது தந்திடும்/


கடைசி அடிக்குமுன் கடலளவு பட்டாலும்/

படைப்பின் ஓவியமாய் பாங்குடை சிலைவாரா/

துடைத்து விடைத்தெழு துளியும் பலனாகும்/

மடைஉடை வெள்ளமாய் மங்காப் புகழ்சேரும்/


முயற்சிகை விட்டாலும் முயற்சி கைவிடாமலே/

பயிற்சியும் பாங்குடை புதியநல் முயற்சியோடே/

அயர்ச்சியைப் போக்கினால் அகிலமே ஆளலாம்/

தயக்கமதை நீக்கியே தரணியும் வெல்லலாம்/


செந்தமிழ்ச்சுடர் அ.செலஸ்டின் மகிமை ராஜ்

வேம்பார்

கருவேல மரம்

 


நீர்தேடி நிலந்தனில் நெடுந்தொலை சென்றங்கே/
வேர்கூடி நீரினையே வியத்தக்க மேலேற்றி/
பார்தணிக்கப் பகிர்ந்திடு பண்புடை *கருவேலம்*/
சீர்கொண்ட பணக்காரர் செய்திடுவார் கருவூலம்/

அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்

Friday, 4 November 2022

விந்தைமிகு வியாழன்

 விந்தைமிகு வியாழன்

=====================

கடுகுசந்தை அரசு உயர்நிலைப்பளளியின் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்களுக்குப் புதிய மனிதர் ஒருவர் ஆசிரியர்களோடு கலந்து நின்றார். வழக்கமான காலை வழிபாட்டுக் கூட்டம் நிறைவுபெற்று, அந்த வாரத்தில் தினமலர் பட்டம் இதழுக்கான வினாடிவினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவச் செல்வங்களுக்கான புத்தகப்பரிசு வழங்கிட தமிழாசிரியர் அழைத்தபோதுதான் அனைவருக்கும் வியப்பு காத்திருந்தது...  ஆம்..  பரிசு வழங்கிட மேடைக்கு வருகை புரிந்தவர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்திரு.ஜானி டாம் வர்கீஸ் அவர்கள்... 

வினாடிவினா வெற்றியாளர்களுக்குப் புத்தகப் பரிசு வழங்கிய பின்னர் தலைமையாசிரியர் விஜய ராஜன் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மாவீரன் பகத்சிங் என்ற புத்தகத்தைப் பரிசாக வழங்கினார்.  தலைமையாசிரியரோடு ஆசிரியப் பெருமக்களும், அலுவலகப் பணியாளர்களும் கடுகுசந்தை பொதுமக்களும் அகமகிழ்ந்த தருணமது 

தொடர்ந்து மாணவச் செல்வங்களின் நலன் விசாரித்து,அவர்களது மழைக்கால விழிப்புணர்வு அறிவுரைகள்கூறினார் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள். தொடர்ந்து பாரத சாரண சாரணிய இயக்கம் குறித்துக் கேட்டறிந்து,அதன் குறிக்கோள் என்னவென மாணவர்களிடம் கேட்டார். "எப்பொழுதும் தயாராயிரு" என்ற குறிக்கோளினை மாணவர்கள் கூறியதும் அதனைச் சார்ந்து மாணவர்களோடு உரையாடி, காலை வழிபாட்டுக் கூட்டத்தில் சிறப்பித்த மாணவச் செல்வங்களையும் பாராட்டினார்.மகிழ்வோடு மதியத்தில் நடைபெற்ற குழு ஆய்விற்காகக் காத்திருந்தோம். குழு ஆய்வினையும் சிறப்பாக எதிர்கொண்டு வாழ்த்துப்பெற்ற 03.11.2022 வியாழன் வியப்பு மிகுந்ததாய் வெற்றிகரமான நாளாக அமைந்திருந்தது.

இறைவனுக்கு நன்றி💐🙏










Thursday, 27 October 2022

கடிதினில் நகரும் காலச்சக்கரம் (கடிகாரம்)

 கடிதினில் நகரும் காலச் சக்கரம்


திரைகடல் சூழ்புவியில் திக்கெட்டும் உலவிட/

நரைகூடும் நாள்மட்டும் நிற்காது விரைந்திட/

மரைபோலத் துள்ளியே மண்ணிலே ஓடிட/

தரைமீதில் விழிகூட்டி வழிகாட்டும் கடிகாரம்/


வரையிலா வரங்களால் வாழ்வெலாம் நிறைந்திட/

கரையிலா உரங்கூட்டி கறையிலாது செறிந்திட/

புரையிலாக் கண்போலப் புவிதனில் தெளிவுடனே/

விரைந்தேகி அணிசூட விதிகூட்டும் கடிகாரம்/


காலத்தைத் திட்டமிட்டு காவியம் படைத்திட/

ஞாலத்தைக் கட்டமைக்க ஞானமும் பெற்றிட/

ஆலத்தின் விழுதாகவே ஆற்றலும் அடைந்திட/

தூலத்தின் உயரம்போல் துணைசெய்யும் கடிகாரம்/


மணியுடன் நில்லாது மிகச்சிறு நொடிகூட/

பணியுடன் செறிவூட்டி பீடுபல அணிந்திட/

துணிவுடன் எழுந்திட்டு தூணாக நிமிர்ந்திட/

அணிசெய்து வாழ்வினில் அழகூட்ட வருகவே/


செந்தமிழ்ச்சுடர்

அ.செலஸ்டின் மகிமை ராஜ்

வேம்பார்


Wednesday, 28 September 2022

தாத்தாவே ஆத்தாவே உனக்காக...



தாத்தாவே ஆத்தாவே உனக்காக...

காத்தால எந்திரிச்சு காடுகரை சுத்திவந்து
பாத்தாலே உன்னோட பாசமெல்லாம் கண்ணுக்குள்ள
கீத்தாகப் பரவிடுதே குளிர்நிலவா நெறைஞ்சிடுதே
ஆத்தாளப் பெத்தெடுத்த அரும மவராணி

வாய்க்கா வரப்புல வழிந்தோடும் தண்ணீரும்
காய்க்கா மரங்கூட கனிந்தோடும் அதிசயமும்
மேய்க்கா நிலையிலுமே மாடுதரும் செல்வமுமே
அய்யா நீஇல்லாம அரக்காசு ஈட்டலயே

பள்ளிக்கூடம் போகுமுன்னே பக்குவமாப் பாத்தனுப்பி
தள்ளிக்கூட நடக்காமத் தாங்குவியே என்ஆத்தா
வள்ளியோட திருமணத்த வகையாக நான்பாக்க
துள்ளியோடி எங்கூடத் துணையாக வந்தவரே

நிழலோட அரும வெயிலுலதான் தெரியுமுன்னு
பலமுறைநீ சொன்னப்போ படிக்கலயே நான்உன்ன
நீயில்லா நேரத்துல நிழல்கூட சொல்லிடுதே
ஆத்தாவே தாத்தாவே உன்னோட பெருமைகள
வருவாயா? வரந்தருவாயா? ஏக்கத்தோடு உம்பேரன்



செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

Tuesday, 27 September 2022

லளழகர சிறப்பு குறும்பா


தலைமாணாக்கர் அறியாமைத்/
தளையினை அகற்றித்/
தழைத்தோங்கிடச் செய்வதே கல்வி/

தலை
தளை
தழை

செந்தமிழ்ச்சுடர் அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

Monday, 26 September 2022

தெரிவை என்னும் பருவம்(பெண்)




 தித்திக்கும் தெரிவை


பெண்ணின் பருவத்துள் ஆறாம் பருவமாய்/

கண்ணின் இமைபோலக் காக்கும் பருவமாய்/ 

எண்ணியன ஈடேறும் இனிய பருவமாய்/

பண்ணினை மீட்டிடும் பருவமே தெரிவை/


இல்லறம் நுழைந்திடும் இணையிலாப் பருவமாய்/

நல்லறம் நோக்கிய நலமிகு பருவமாய்/

இல்வாழ்வில் விருந்தோம்பலில் இனிமை சேர்த்து/

எல்லோரையும் மகிழ்விக்கும் ஈடிலாப் பருவம்/


தாயாய் நின்றே தரணியைத் தாங்கிடவும்/

தாரமாய் நின்று தளர்வினைப் போக்கிடவும்/

சேயினை ஈன்றவள் சீர்பெறச் செய்திடவும்/

சோர்வினைப் போக்கியே சுகந்தரும் தெரிவை/


அன்பும் அறனும் உடையதோர் இல்வாழ்வைப்/

பண்பும் பயனுமாய்ப் பொலிவுறச் செய்துநல்/

இன்பம் பொங்கிடும் இல்லறத்தின் இளமையாம்/ 

தெரிவையைப் பாடுவோம் புகழ்மாலை சூடுவோம்/


செந்தமிழ்ச்சுடர்

அ.செலஸ்டின் மகிமை ராஜ்

வேம்பார்

Sunday, 25 September 2022

ஏழையின் சிரிப்பினில்...


*ஏழையின் சிரிப்பில்...*

உண்டிட உணவிலாது உருக்குலைந்த மானிடரைக்/
கண்டிட நேர்ந்திடின் கருணையுடை மாந்தராய்/
பண்டியை நிரப்பிநாம் பசியாவது போக்கினால்/
எண்ணிலாக் களிப்பினை ஏழையிடம் காணலாம்/

உடுத்திட உடையிலாது ஊறுவிளைக்கும் சமயங்கள்/
படுத்திட இடமில்லாத பகல்காணும் இரவுகள்/
விடுத்திட அழைப்பிலாத வீதிகாணும் பொழுதுகள்/
தடுத்தாள வாய்த்திடின் தடைசெய்ய வேண்டுமே/

பணமிலா கணத்தினைப் பாரினில் கண்டிட்டால்/
மணமிலா வாழ்வதனை மணங்கூட்ட எண்ணியே/
குணந்தனை மெருகூட்டி குவலயத்தில் விழிகூட்டும்/
பாணர்களின் இறைவனாம் பாரியாக மாறுவோம்/

கல்வியுடன் செல்வமும் கண்டிடா ஏழையர்/
நல்லறிவு பெற்றுநாளும் நானிலத்தில் ஒளிரவே/
எல்லோரும் வழிகூட்டி ஏழைகளை மகிழ்வூட்டி/
எல்லையிலா வரங்காண இறைவனையும் வேண்டிடுவோம்/

செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

காந்தக் குரலோனுக்குக் கவிதாஞ்சலி


என்னோடு பாட்டுப் பாடுங்கள்

காந்தக் குரலினால் கேட்போரை ஈர்த்து
சாந்தம் மிகப்பெற்று சங்கதியும் சேர்த்து
தீந்தமிழ் சொல்லிலே திகட்டா இசைகோத்து
மாந்திட வழிகூட்டிய மன்னவரே மணியரே

அம்மாவின் அன்பையும் அரவணைக்கும் பண்பையும்
இம்மாநிலம் உரைத்ததோ இனியநும் குரலிசையே
எம்மாந்தர் கேட்டாலும் ஏந்திநின்று இதயத்திலே
கும்மாளம் இடச்செய்யும் குதூகலக் குரலோனே

இசைக்கு மயங்கார் இவ்வுலகில் இல்லையென
இசைகூட்டிய சொல்வளம் இனியவனே உனதன்றோ!
திசைமாறிய பறவைக்கும் தித்தித்த உனதுகுரல்
பசைகூட்டி வாழ்வினிலே பற்றுகொள்ளச் செய்ததுவே

தேனினும் இனியநல் திருவாசகம் அனையவே
வானினும் உயர்ந்தோங்கிய வனப்புமிகு இசையாலே
வையக்கத்துள் வாழ்ந்துவரும் வனப்புமிகு வான்நிலவே
வையகம் உள்ளவரை வாழ்வாங்கு வாழியவே


செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

Saturday, 24 September 2022

என்ன தவம் செய்தேனோ

 


என்னதவம் செய்தேனோ.!

பள்ளிக்காலம் முடிந்து பாரினில் எழுந்து/
தெள்ளிய சிந்தனையால் திசைதேடிச் சென்று/
முள்ளான பாதைகளில் முட்டியினால் தவழ்ந்து/
வெள்ளிடை மலையென வியனுலகில் சிறந்திடவே/

கல்வியைக் கரம்பற்றி கரையிலா நூல்கற்று/
வல்வினை ஓட்டியே வலியதோர் நிலைநாட்டி/
அல்லல்கள் நீக்கிடவே அறிவினைக் கைக்கொண்டு/
நல்லதோர் நிலைகண்ட நலவாழ்வு மிகவுண்டு/

தீயினிலே மிகவுழன்று தேநீரும் விற்றலைந்து/
தீயணைப்புத் துறைதனிலே தீநாவின் சுற்றளந்து/
தீயினாற் சுட்டிடா திறமிகு சொல்வன்மை/
சேயிடை கூறிடவே சீர்மிகு ஆசானானேன்/

குடிசையிலே பிறந்து கோபுரமாய் நிமிர்ந்து/
விடியுநிலை தெரிந்து வியனுலகில் சிறந்து/
துடிப்பாக எழுந்திட்டு துயரங்கள் மறந்து/
பிடிப்பிலாது எழுந்திட என்னதவம் செய்தேனோ.?/

செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


Friday, 23 September 2022

நீடுதுயில் நீக்கவந்த நிலா


 

நீடுதுயில் நீக்கவந்த நிலா


பாட்டுக்கொரு புலவனாய் பாரினில் உதித்து/

ஏட்டுக்குநற் கவிஞனாய் எழிலாய் எழுந்து/

நாட்டுக்கொரு தலைவனாய் நிமிர்ந்தே சிறந்து/

நாட்டினார் புகழ்க்கொடி நற்றமிழால் நல்லபடி/


அறியாமை நீங்கிடவே ஆற்றல்மிகு சொல்லோவியம்/

செறிவாகத் தந்தவரே சீற்றமுடன் உரைத்தவரே/

குறிபார்த்துப் பெண்ணினத்தை கூட்டுக்குள் அடைத்தோரை/

வெறிகொண்டு விரட்டிடவே வண்டமிழ் பகர்ந்தவரே/


தளைதனில் சிக்கிநின்ற தீந்தமிழின் வீரியத்தைத்/

துளைமீண்டு தென்றலாய்த் தேனூறும் இசையாக/

முளைத்திட முட்டிநிற்கும் முற்றியதோர் விதையாக/

விளைந்தநற் புதுக்கவியாய் வியனுலகில் படைத்தவரே/


எண்ணத்தைக் காவியமாய் ஏத்திடும் எல்லோரையும்/

திண்ணிய நெஞ்சுடனே தீரமிக்க கவிவடிக்கப்/

பண்ணிய பாவலனே பைந்தமிழ்ச் சூரியனே/

எண்ணிலாக் கவிகளின்று எழுதுவதே உன்ஒளியில்... /


செந்தமிழ்ச்சுடர்

அ.செலஸ்டின் மகிமை ராஜ்

வேம்பார்

குறும்பா


 

கோபுரக் கவிதை


ஆகாயக்குடையுள்/
ஆக்கிரமித்த இருளகற்றி/
ஆட்சிசெய்யக் கடுகிவா கதிரவனே/
ஆற்றல்மிகு கரங்காண/
ஆவலோடு/


செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

Thursday, 22 September 2022

சிலந்தி வலை


உறைவிடத்தால் உணவுகூட்டி/
ஊருக்கே முயற்சிகூட்டி/
பகிர்தலையும் புவிக்கூட்டும் பட்டுச்சிலந்தி/

அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

அமைதி வேண்டி


பெருவிரலாய்ப் பிரிந்திடாது/
சிறுவிரலாய் ஒன்றுவோம்/
அமைதி நம்மிலிருந்து அகிலத்திற்கு...

அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

ஓட்டந்தொலைத்து ஒயிலாக வாழ்வோம்



*ஓட்டந்தொலைத்து ஒயிலாக வாழ்வோம்!*

ஆடியடங்கும் வாழ்க்கையையும் ஆறடி நிலத்தையும்/
நாடியிருக்கும் மாந்தரினம் நலமிகு வாழ்வழித்து/
ஓடியோடிப் பொருள்தேடி உருக்குலைந்து மீண்டிடாது/
கோடிநாடி ஓடுகின்ற களங்கமதை  என்செய்வோம்?/

இளமையைத் தொலைத்திட்டு இன்பமதை விடுவித்து/
வளமைமிகு வாழ்வதை வாடிடவே செய்திட்டு/
களம்பல கண்டாங்கே கருணையும் தொலைத்திட்டு/
உளநோயால்  ஓய்ந்திட்டு உட்காரா நிலையேனோ?/

வாழ்ந்திடும் ஒருமுறை வனப்புடைய வாழ்வுடன்/
தாழ்ந்திடும் நிலையிலும் தலைபணியா நடையுடன்/
வீழ்ந்திடும் நிலையிலும் வியத்தகு சீர்கூட்டும்/
சூழ்நிலைச் சிறப்பினை சூழ்கடலும் போற்றுமே.! /

தனந்தனைத் தேடித்தேடி தினந்தோறும் பரிதவிக்கும்/
மனந்தனை விட்டோடி மணங்கமழ் வாழ்வதை/
தினந்தினம் வாழ்ந்திட தித்திக்கும் ஆள்கையை/
மனந்தனில் ஏற்றுவோம் மாண்புகழ் சாற்றுவோம்! 

செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

சங்கத்தமிழ்ச் செல்வம்


*சங்கத் தமிழ்ச் செல்வம்*

வங்கக் கடலின் வனப்பிடை உதித்து/
 சிங்கம் அனையவே சீர்பெற்றுச் சிறந்து/
தங்கம் போலவே தணலிலும் உறைந்து/
எங்கும் நிறைபவள் எங்கள் தமிழ்த்தாய்/

முச்சங்கம் பிறந்து மூவேந்தரிடை வளர்ந்து/
எச்சங்கத் துள்ளும் எதிர்வாதம் புரிந்து/
கச்சிதமாய் எழுந்து காசினியில் நிமிர்ந்து/
 உச்சிநின்று ஒளிகூட்டி உலகாளும் சங்கத்தமிழ்/

பதிற்றுப் பத்துடன் புறநானூறாய்ப் புறங்கொண்டு/
அதிசிறந்த நற்றிணையொடு ஐந்துநூல் அகங்கொண்டு/
பதிசிறந்த சேயோனுடன் பரிபாடலில் இருபொருளும்/
கதியாகப் பெற்றதே கவின்மிகு எட்டுத்தொகை/

ஆற்றொணா மாந்தரை ஆற்றிடவே எழுந்திட்ட/
ஆற்றுப்படை நூல்களொடு ஐயிரண்டு பாட்டாகத்/
தோற்றமுடை பத்துப்பாட்டாய்த்  திக்கெட்டும் புகழ்கொண்ட/
ஏற்றமுடை எங்கள்தமிழ் என்றென்றும் வாழியவே! 


செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

Monday, 19 September 2022

கலாச்சாரத்தில் தொடுப்போம் கவிச்சரம்

*கலாச்சாரத்தில் தொடுப்போம் கவிச்சரம்*

கலைகளால் அணிசெய்து காவியம் ஆக்கியே/
சிலைகளால் சீர்மிக்க சிந்தனையால் தேக்கியே/
அலைகளாய் சொல்கோத்து அடுக்கிய நூல்களால்/
மலைபோல உயர்ந்ததே மறத்தமிழ்க் கலாச்சாரம்/

அன்னையுடன் தந்தையின் அன்பிலே உதித்தது/
தன்னையே மிஞ்சிடத் தனிவழி காட்டிடும்/
அண்ணலாம் ஆசானின் அருள்வழி நடத்தலில்/
எண்ணரும் சிறப்பினால் ஏற்றமிகப் பெற்றதே/

உறவுப் பாலங்களால் உணர்வுக் கட்டமைத்து/
மரபின் வேலிகளால் மங்காத நெறியமைத்து/
உறவைப் பேணிடவே விழாக்கள் பலஅமைத்து/
துறவும் போற்றிட்ட தூயதமிழ் கலாச்சாரம்/

செம்புலப் பெயல்நீராய் சொந்தத்தை உருவாக்கி/
இம்மையில் இவளேயென இறுக்கிய முடிச்சிட்டு/
எம்மாந்தரும் வியப்பினிலே ஏறிட்டுப் பார்த்திடும்நல்/
செம்மாந்த கலாச்சாரச் செழுந்தமிழர் வாழியவே/ 

செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

வேற்றுமையில் ஒற்றுமை


வேற்றுமையில் ஒற்றுமை


தள்ளாடும் நிலையில் தவித்திடும் ஒருவனும்

துள்ளிடும் நிலையில் துடித்திடும் ஒருவனும்

வெள்ளமாய் மடைதிறந்து விளம்பிடும் ஒருவனும்

பள்ளமாய் தாழ்ந்திட்டு புலம்பிடும் ஒருவனும்


கள்ளத்தை அகங்கொண்ட கறையுடை ஒருவனும்

உள்ளத்தை வெண்மையாய் உரித்தாக்கும் ஒருவனும்

தெள்ளிய சிந்தனையால் திசைகாட்டும் ஒருவனும்

முள்ளாகச் சிந்தித்து முடக்கிடும் ஒருவனும்


உள்ளத்தால் ஒன்றுபட்டு உலகத்தால் ஒன்றிணைந்து

வெள்ளைமணம் கொண்டிங்கு வியத்தகு செயல்களாலே

வள்ளைப்பாட்டு பாடிடும் வனப்புமிகு உழத்தியர்போல்

புள்ளாகப் பறந்திங்கே பூங்குயிலாய் உலாவருவர்


அள்ளக்குறையா அமுதமென ஆற்றல்சேர் கல்விதனை

தள்ளாடிடும் பருவத்திலும் தாங்கிநிற்கும் செல்வந்தனை

அள்ளியள்ளித் தந்திடும் அழகியதோர் கல்விக்கூடமாம்

பள்ளியே வேற்றுமையில் ஒற்றுமைக்கு உறைவிடமாம்


செந்தமிழ்ச்சுடர் அ.செலஸ்டின் மகிமை ராஜ்

வேம்பார் 


 

Sunday, 18 September 2022

எமக்குத் தொழில் கவிதை


 *எமக்குத் தொழில் கவிதை*


நல்லதைச் சொல்லி நானிலம் போற்றிட/

அல்லதைச் சொல்லி அறவே நீக்கிட/

சொல்லிடும் சொல்லை வெல்லும் சொல்லாய்/

சொல்லிடும் மறவரே செந்தமிழ்க் கவிஞர்/


அறத்தை வலியுறுத்தி ஆன்றதோர் வழிசமைத்து/

நிறத்தால் மொழியால் நிந்தனைச் செயல்களால்/

சிறுத்த மனத்தினராய் சிந்தைகெட்ட மானிடரைச்/

சிறுத்தையாய்ப் பாய்ந்து சீர்படுத்தும் நெறியாளர்/


அறிவுரை கூறிநல் அன்புவழி காட்டிடும்/

நெறிதனைச் செய்திட நானிலம் செதுக்கிட/

சிறியோரை உளிகொண்டு சிற்பமாய் வடித்திட/

அறிவினால் சொல்கூட்டி அணிசெய்யும் சிற்பி/


அருந்தமிழ் வீரராய் ஆக்கப்பணி செய்திட்டு/

மருந்தையும் இனியதாய் மனங்கவரத் தந்திட்டு/

பருந்தினும் மேலாகப் பாரினை வலம்வந்து/

விருந்தாய் நற்றமிழ் விழிகூட்டும் கவிஞராம்/

எமக்குத் தொழில் கவிதை... 

எந்நாளும் விதைப்போம் அதை...


செந்தமிழ்ச்சுடர் அ.செலஸ்டின் மகிமை ராஜ்

வேம்பார்