நீடுதுயில் நீக்கவந்த நிலா
பாட்டுக்கொரு புலவனாய் பாரினில் உதித்து/
ஏட்டுக்குநற் கவிஞனாய் எழிலாய் எழுந்து/
நாட்டுக்கொரு தலைவனாய் நிமிர்ந்தே சிறந்து/
நாட்டினார் புகழ்க்கொடி நற்றமிழால் நல்லபடி/
அறியாமை நீங்கிடவே ஆற்றல்மிகு சொல்லோவியம்/
செறிவாகத் தந்தவரே சீற்றமுடன் உரைத்தவரே/
குறிபார்த்துப் பெண்ணினத்தை கூட்டுக்குள் அடைத்தோரை/
வெறிகொண்டு விரட்டிடவே வண்டமிழ் பகர்ந்தவரே/
தளைதனில் சிக்கிநின்ற தீந்தமிழின் வீரியத்தைத்/
துளைமீண்டு தென்றலாய்த் தேனூறும் இசையாக/
முளைத்திட முட்டிநிற்கும் முற்றியதோர் விதையாக/
விளைந்தநற் புதுக்கவியாய் வியனுலகில் படைத்தவரே/
எண்ணத்தைக் காவியமாய் ஏத்திடும் எல்லோரையும்/
திண்ணிய நெஞ்சுடனே தீரமிக்க கவிவடிக்கப்/
பண்ணிய பாவலனே பைந்தமிழ்ச் சூரியனே/
எண்ணிலாக் கவிகளின்று எழுதுவதே உன்ஒளியில்... /
செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்

No comments:
Post a Comment