*கலாச்சாரத்தில் தொடுப்போம் கவிச்சரம்*
கலைகளால் அணிசெய்து காவியம் ஆக்கியே/
சிலைகளால் சீர்மிக்க சிந்தனையால் தேக்கியே/
அலைகளாய் சொல்கோத்து அடுக்கிய நூல்களால்/
மலைபோல உயர்ந்ததே மறத்தமிழ்க் கலாச்சாரம்/
அன்னையுடன் தந்தையின் அன்பிலே உதித்தது/
தன்னையே மிஞ்சிடத் தனிவழி காட்டிடும்/
அண்ணலாம் ஆசானின் அருள்வழி நடத்தலில்/
எண்ணரும் சிறப்பினால் ஏற்றமிகப் பெற்றதே/
உறவுப் பாலங்களால் உணர்வுக் கட்டமைத்து/
மரபின் வேலிகளால் மங்காத நெறியமைத்து/
உறவைப் பேணிடவே விழாக்கள் பலஅமைத்து/
துறவும் போற்றிட்ட தூயதமிழ் கலாச்சாரம்/
செம்புலப் பெயல்நீராய் சொந்தத்தை உருவாக்கி/
இம்மையில் இவளேயென இறுக்கிய முடிச்சிட்டு/
எம்மாந்தரும் வியப்பினிலே ஏறிட்டுப் பார்த்திடும்நல்/
செம்மாந்த கலாச்சாரச் செழுந்தமிழர் வாழியவே/
செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்

No comments:
Post a Comment