Sunday, 18 September 2022

எமக்குத் தொழில் கவிதை


 *எமக்குத் தொழில் கவிதை*


நல்லதைச் சொல்லி நானிலம் போற்றிட/

அல்லதைச் சொல்லி அறவே நீக்கிட/

சொல்லிடும் சொல்லை வெல்லும் சொல்லாய்/

சொல்லிடும் மறவரே செந்தமிழ்க் கவிஞர்/


அறத்தை வலியுறுத்தி ஆன்றதோர் வழிசமைத்து/

நிறத்தால் மொழியால் நிந்தனைச் செயல்களால்/

சிறுத்த மனத்தினராய் சிந்தைகெட்ட மானிடரைச்/

சிறுத்தையாய்ப் பாய்ந்து சீர்படுத்தும் நெறியாளர்/


அறிவுரை கூறிநல் அன்புவழி காட்டிடும்/

நெறிதனைச் செய்திட நானிலம் செதுக்கிட/

சிறியோரை உளிகொண்டு சிற்பமாய் வடித்திட/

அறிவினால் சொல்கூட்டி அணிசெய்யும் சிற்பி/


அருந்தமிழ் வீரராய் ஆக்கப்பணி செய்திட்டு/

மருந்தையும் இனியதாய் மனங்கவரத் தந்திட்டு/

பருந்தினும் மேலாகப் பாரினை வலம்வந்து/

விருந்தாய் நற்றமிழ் விழிகூட்டும் கவிஞராம்/

எமக்குத் தொழில் கவிதை... 

எந்நாளும் விதைப்போம் அதை...


செந்தமிழ்ச்சுடர் அ.செலஸ்டின் மகிமை ராஜ்

வேம்பார்

No comments:

Post a Comment