வேற்றுமையில் ஒற்றுமை
தள்ளாடும் நிலையில் தவித்திடும் ஒருவனும்
துள்ளிடும் நிலையில் துடித்திடும் ஒருவனும்
வெள்ளமாய் மடைதிறந்து விளம்பிடும் ஒருவனும்
பள்ளமாய் தாழ்ந்திட்டு புலம்பிடும் ஒருவனும்
கள்ளத்தை அகங்கொண்ட கறையுடை ஒருவனும்
உள்ளத்தை வெண்மையாய் உரித்தாக்கும் ஒருவனும்
தெள்ளிய சிந்தனையால் திசைகாட்டும் ஒருவனும்
முள்ளாகச் சிந்தித்து முடக்கிடும் ஒருவனும்
உள்ளத்தால் ஒன்றுபட்டு உலகத்தால் ஒன்றிணைந்து
வெள்ளைமணம் கொண்டிங்கு வியத்தகு செயல்களாலே
வள்ளைப்பாட்டு பாடிடும் வனப்புமிகு உழத்தியர்போல்
புள்ளாகப் பறந்திங்கே பூங்குயிலாய் உலாவருவர்
அள்ளக்குறையா அமுதமென ஆற்றல்சேர் கல்விதனை
தள்ளாடிடும் பருவத்திலும் தாங்கிநிற்கும் செல்வந்தனை
அள்ளியள்ளித் தந்திடும் அழகியதோர் கல்விக்கூடமாம்
பள்ளியே வேற்றுமையில் ஒற்றுமைக்கு உறைவிடமாம்
செந்தமிழ்ச்சுடர் அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்

No comments:
Post a Comment