Monday, 19 September 2022

வேற்றுமையில் ஒற்றுமை


வேற்றுமையில் ஒற்றுமை


தள்ளாடும் நிலையில் தவித்திடும் ஒருவனும்

துள்ளிடும் நிலையில் துடித்திடும் ஒருவனும்

வெள்ளமாய் மடைதிறந்து விளம்பிடும் ஒருவனும்

பள்ளமாய் தாழ்ந்திட்டு புலம்பிடும் ஒருவனும்


கள்ளத்தை அகங்கொண்ட கறையுடை ஒருவனும்

உள்ளத்தை வெண்மையாய் உரித்தாக்கும் ஒருவனும்

தெள்ளிய சிந்தனையால் திசைகாட்டும் ஒருவனும்

முள்ளாகச் சிந்தித்து முடக்கிடும் ஒருவனும்


உள்ளத்தால் ஒன்றுபட்டு உலகத்தால் ஒன்றிணைந்து

வெள்ளைமணம் கொண்டிங்கு வியத்தகு செயல்களாலே

வள்ளைப்பாட்டு பாடிடும் வனப்புமிகு உழத்தியர்போல்

புள்ளாகப் பறந்திங்கே பூங்குயிலாய் உலாவருவர்


அள்ளக்குறையா அமுதமென ஆற்றல்சேர் கல்விதனை

தள்ளாடிடும் பருவத்திலும் தாங்கிநிற்கும் செல்வந்தனை

அள்ளியள்ளித் தந்திடும் அழகியதோர் கல்விக்கூடமாம்

பள்ளியே வேற்றுமையில் ஒற்றுமைக்கு உறைவிடமாம்


செந்தமிழ்ச்சுடர் அ.செலஸ்டின் மகிமை ராஜ்

வேம்பார் 


 

No comments:

Post a Comment