Wednesday, 28 September 2022
தாத்தாவே ஆத்தாவே உனக்காக...
Tuesday, 27 September 2022
லளழகர சிறப்பு குறும்பா
Monday, 26 September 2022
தெரிவை என்னும் பருவம்(பெண்)
தித்திக்கும் தெரிவை
பெண்ணின் பருவத்துள் ஆறாம் பருவமாய்/
கண்ணின் இமைபோலக் காக்கும் பருவமாய்/
எண்ணியன ஈடேறும் இனிய பருவமாய்/
பண்ணினை மீட்டிடும் பருவமே தெரிவை/
இல்லறம் நுழைந்திடும் இணையிலாப் பருவமாய்/
நல்லறம் நோக்கிய நலமிகு பருவமாய்/
இல்வாழ்வில் விருந்தோம்பலில் இனிமை சேர்த்து/
எல்லோரையும் மகிழ்விக்கும் ஈடிலாப் பருவம்/
தாயாய் நின்றே தரணியைத் தாங்கிடவும்/
தாரமாய் நின்று தளர்வினைப் போக்கிடவும்/
சேயினை ஈன்றவள் சீர்பெறச் செய்திடவும்/
சோர்வினைப் போக்கியே சுகந்தரும் தெரிவை/
அன்பும் அறனும் உடையதோர் இல்வாழ்வைப்/
பண்பும் பயனுமாய்ப் பொலிவுறச் செய்துநல்/
இன்பம் பொங்கிடும் இல்லறத்தின் இளமையாம்/
தெரிவையைப் பாடுவோம் புகழ்மாலை சூடுவோம்/
செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்
Sunday, 25 September 2022
ஏழையின் சிரிப்பினில்...
காந்தக் குரலோனுக்குக் கவிதாஞ்சலி
Saturday, 24 September 2022
என்ன தவம் செய்தேனோ
Friday, 23 September 2022
நீடுதுயில் நீக்கவந்த நிலா
நீடுதுயில் நீக்கவந்த நிலா
பாட்டுக்கொரு புலவனாய் பாரினில் உதித்து/
ஏட்டுக்குநற் கவிஞனாய் எழிலாய் எழுந்து/
நாட்டுக்கொரு தலைவனாய் நிமிர்ந்தே சிறந்து/
நாட்டினார் புகழ்க்கொடி நற்றமிழால் நல்லபடி/
அறியாமை நீங்கிடவே ஆற்றல்மிகு சொல்லோவியம்/
செறிவாகத் தந்தவரே சீற்றமுடன் உரைத்தவரே/
குறிபார்த்துப் பெண்ணினத்தை கூட்டுக்குள் அடைத்தோரை/
வெறிகொண்டு விரட்டிடவே வண்டமிழ் பகர்ந்தவரே/
தளைதனில் சிக்கிநின்ற தீந்தமிழின் வீரியத்தைத்/
துளைமீண்டு தென்றலாய்த் தேனூறும் இசையாக/
முளைத்திட முட்டிநிற்கும் முற்றியதோர் விதையாக/
விளைந்தநற் புதுக்கவியாய் வியனுலகில் படைத்தவரே/
எண்ணத்தைக் காவியமாய் ஏத்திடும் எல்லோரையும்/
திண்ணிய நெஞ்சுடனே தீரமிக்க கவிவடிக்கப்/
பண்ணிய பாவலனே பைந்தமிழ்ச் சூரியனே/
எண்ணிலாக் கவிகளின்று எழுதுவதே உன்ஒளியில்... /
செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்
கோபுரக் கவிதை
Thursday, 22 September 2022
சிலந்தி வலை
அமைதி வேண்டி
ஓட்டந்தொலைத்து ஒயிலாக வாழ்வோம்
*ஓட்டந்தொலைத்து ஒயிலாக வாழ்வோம்!*
ஆடியடங்கும் வாழ்க்கையையும் ஆறடி நிலத்தையும்/
நாடியிருக்கும் மாந்தரினம் நலமிகு வாழ்வழித்து/
ஓடியோடிப் பொருள்தேடி உருக்குலைந்து மீண்டிடாது/
கோடிநாடி ஓடுகின்ற களங்கமதை என்செய்வோம்?/
இளமையைத் தொலைத்திட்டு இன்பமதை விடுவித்து/
வளமைமிகு வாழ்வதை வாடிடவே செய்திட்டு/
களம்பல கண்டாங்கே கருணையும் தொலைத்திட்டு/
உளநோயால் ஓய்ந்திட்டு உட்காரா நிலையேனோ?/
வாழ்ந்திடும் ஒருமுறை வனப்புடைய வாழ்வுடன்/
தாழ்ந்திடும் நிலையிலும் தலைபணியா நடையுடன்/
வீழ்ந்திடும் நிலையிலும் வியத்தகு சீர்கூட்டும்/
சூழ்நிலைச் சிறப்பினை சூழ்கடலும் போற்றுமே.! /
தனந்தனைத் தேடித்தேடி தினந்தோறும் பரிதவிக்கும்/
மனந்தனை விட்டோடி மணங்கமழ் வாழ்வதை/
தினந்தினம் வாழ்ந்திட தித்திக்கும் ஆள்கையை/
மனந்தனில் ஏற்றுவோம் மாண்புகழ் சாற்றுவோம்!
செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்
சங்கத்தமிழ்ச் செல்வம்
Monday, 19 September 2022
கலாச்சாரத்தில் தொடுப்போம் கவிச்சரம்
வேற்றுமையில் ஒற்றுமை
வேற்றுமையில் ஒற்றுமை
தள்ளாடும் நிலையில் தவித்திடும் ஒருவனும்
துள்ளிடும் நிலையில் துடித்திடும் ஒருவனும்
வெள்ளமாய் மடைதிறந்து விளம்பிடும் ஒருவனும்
பள்ளமாய் தாழ்ந்திட்டு புலம்பிடும் ஒருவனும்
கள்ளத்தை அகங்கொண்ட கறையுடை ஒருவனும்
உள்ளத்தை வெண்மையாய் உரித்தாக்கும் ஒருவனும்
தெள்ளிய சிந்தனையால் திசைகாட்டும் ஒருவனும்
முள்ளாகச் சிந்தித்து முடக்கிடும் ஒருவனும்
உள்ளத்தால் ஒன்றுபட்டு உலகத்தால் ஒன்றிணைந்து
வெள்ளைமணம் கொண்டிங்கு வியத்தகு செயல்களாலே
வள்ளைப்பாட்டு பாடிடும் வனப்புமிகு உழத்தியர்போல்
புள்ளாகப் பறந்திங்கே பூங்குயிலாய் உலாவருவர்
அள்ளக்குறையா அமுதமென ஆற்றல்சேர் கல்விதனை
தள்ளாடிடும் பருவத்திலும் தாங்கிநிற்கும் செல்வந்தனை
அள்ளியள்ளித் தந்திடும் அழகியதோர் கல்விக்கூடமாம்
பள்ளியே வேற்றுமையில் ஒற்றுமைக்கு உறைவிடமாம்
செந்தமிழ்ச்சுடர் அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்
Sunday, 18 September 2022
எமக்குத் தொழில் கவிதை
*எமக்குத் தொழில் கவிதை*
நல்லதைச் சொல்லி நானிலம் போற்றிட/
அல்லதைச் சொல்லி அறவே நீக்கிட/
சொல்லிடும் சொல்லை வெல்லும் சொல்லாய்/
சொல்லிடும் மறவரே செந்தமிழ்க் கவிஞர்/
அறத்தை வலியுறுத்தி ஆன்றதோர் வழிசமைத்து/
நிறத்தால் மொழியால் நிந்தனைச் செயல்களால்/
சிறுத்த மனத்தினராய் சிந்தைகெட்ட மானிடரைச்/
சிறுத்தையாய்ப் பாய்ந்து சீர்படுத்தும் நெறியாளர்/
அறிவுரை கூறிநல் அன்புவழி காட்டிடும்/
நெறிதனைச் செய்திட நானிலம் செதுக்கிட/
சிறியோரை உளிகொண்டு சிற்பமாய் வடித்திட/
அறிவினால் சொல்கூட்டி அணிசெய்யும் சிற்பி/
அருந்தமிழ் வீரராய் ஆக்கப்பணி செய்திட்டு/
மருந்தையும் இனியதாய் மனங்கவரத் தந்திட்டு/
பருந்தினும் மேலாகப் பாரினை வலம்வந்து/
விருந்தாய் நற்றமிழ் விழிகூட்டும் கவிஞராம்/
எமக்குத் தொழில் கவிதை...
எந்நாளும் விதைப்போம் அதை...
செந்தமிழ்ச்சுடர் அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்
Saturday, 17 September 2022
தந்தை பெரியார்
தந்தை பெரியார்
மாயோனின் மகத்துவம்
புண்ணியந்தரு காசியினிலே புனிதராய் உதித்து/
கண்ணியமிகு கடவுளரையும் கடிந்தே எதிர்த்து/
பெண்ணியம் போற்றிட்ட பெருமைமிகு மாமணியே/
திண்ணிய போராட்டங்களால் தீரரான நன்மணியே/
திராவிடக் குழந்தையாம் தெலுங்கதனைப் பேசினாலும்/
தீர்ந்திடா அன்புடைய தமிழன்னையின் ஆசியோடும்/
ஆர்த்திடும் சிந்தனையால் ஆன்றதோர் முன்னெடுப்பால்/
கோர்த்திட்ட சீர்திருத்தம் குவலயத்தால் போற்றப்படுதே/
தீண்டாமைக்குத் தீவைத்து தீவிரமாய் எதிர்த்தவரே/
ஆண்டவர்களின் அடக்குமுறை அடியோடு மிதித்தவரே/
மாண்டிடும் நிலைமட்டும் மரியாதைக் குறைவிலாது/
மீண்டிடத் தூண்டியவரே மேன்மையுற வேண்டியவரே/
சாதியென்னும் சாக்கடையுடன் சமத்துவமிலாச் சதிபடைத்த/
சிறியாரை முடக்கிடவே சீற்றமுடன் எழுந்தவரே /
பெரியாராய் நின்றிலங்கி பீடுறவே நிமிர்த்திட்டு/
புரிந்திட்ட சாதனைகளால் புவியுள்ளவரை வாழ்வீரே.! /
*செந்தமிழ்ச்சுடர்* அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்
Thursday, 15 September 2022
வறுமை ஓட்டி வளமை கூட்டுவோம்
காணொளியும் கவிவரியும்
வறுமை ஓட்டி வளமை கூட்டுவோம்
உண்டிதனைக் கொடுத்தோர் உயிரினைக் கொடுத்தோராய்/
கண்டித்துக் கூறிநின்ற கடந்திட்ட காலத்தவராய்/
பண்டியை நிரப்பிடப் பாடுபட்ட நாட்கள்போய்/
கண்டவிடம் வீசிநிற்கும் கயவர்களை என்செய்ய.../
எலும்புடன் தோலொட்டி எழவியலா மாந்தர்களாய்/
உலுக்கிடும் நிலைதந்து உருக்குலைக்கச் செய்தவராய்/
பலுகியே பெருகிடவும் பங்கிடவும் உணவில்லா/
வலுவற்ற மாந்தர்களும் வாழ்கின்ற உலகமிது/
வலியவராய் உடல்வளர்க்கும் வல்லவர்கள் ஒருபக்கம்/
மெலியவராய் உருக்குலைந்து மடிபவர்கள் மறுபக்கம்/
பலியிடும் நிலைமீட்டு பசியினைப் போக்கிடவே/
புலியெனப் புறப்படுவீர் புரட்சிசெய் தோழர்களே/
இருப்பவர் கொடுத்து இல்லாரை நிரப்பாவிடினும்/
இருப்பதை வீணாக்காது இனியதோர் நிலைகொண்டால்/
பொருப்பாய் மண்ணிலே பீடுறவே நிமிர்ந்து/
வறுமையை ஓட்டலாம் வளமையைக் கூட்டலாம்/
செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்
















