Thursday, 27 October 2022

கடிதினில் நகரும் காலச்சக்கரம் (கடிகாரம்)

 கடிதினில் நகரும் காலச் சக்கரம்


திரைகடல் சூழ்புவியில் திக்கெட்டும் உலவிட/

நரைகூடும் நாள்மட்டும் நிற்காது விரைந்திட/

மரைபோலத் துள்ளியே மண்ணிலே ஓடிட/

தரைமீதில் விழிகூட்டி வழிகாட்டும் கடிகாரம்/


வரையிலா வரங்களால் வாழ்வெலாம் நிறைந்திட/

கரையிலா உரங்கூட்டி கறையிலாது செறிந்திட/

புரையிலாக் கண்போலப் புவிதனில் தெளிவுடனே/

விரைந்தேகி அணிசூட விதிகூட்டும் கடிகாரம்/


காலத்தைத் திட்டமிட்டு காவியம் படைத்திட/

ஞாலத்தைக் கட்டமைக்க ஞானமும் பெற்றிட/

ஆலத்தின் விழுதாகவே ஆற்றலும் அடைந்திட/

தூலத்தின் உயரம்போல் துணைசெய்யும் கடிகாரம்/


மணியுடன் நில்லாது மிகச்சிறு நொடிகூட/

பணியுடன் செறிவூட்டி பீடுபல அணிந்திட/

துணிவுடன் எழுந்திட்டு தூணாக நிமிர்ந்திட/

அணிசெய்து வாழ்வினில் அழகூட்ட வருகவே/


செந்தமிழ்ச்சுடர்

அ.செலஸ்டின் மகிமை ராஜ்

வேம்பார்


Wednesday, 28 September 2022

தாத்தாவே ஆத்தாவே உனக்காக...



தாத்தாவே ஆத்தாவே உனக்காக...

காத்தால எந்திரிச்சு காடுகரை சுத்திவந்து
பாத்தாலே உன்னோட பாசமெல்லாம் கண்ணுக்குள்ள
கீத்தாகப் பரவிடுதே குளிர்நிலவா நெறைஞ்சிடுதே
ஆத்தாளப் பெத்தெடுத்த அரும மவராணி

வாய்க்கா வரப்புல வழிந்தோடும் தண்ணீரும்
காய்க்கா மரங்கூட கனிந்தோடும் அதிசயமும்
மேய்க்கா நிலையிலுமே மாடுதரும் செல்வமுமே
அய்யா நீஇல்லாம அரக்காசு ஈட்டலயே

பள்ளிக்கூடம் போகுமுன்னே பக்குவமாப் பாத்தனுப்பி
தள்ளிக்கூட நடக்காமத் தாங்குவியே என்ஆத்தா
வள்ளியோட திருமணத்த வகையாக நான்பாக்க
துள்ளியோடி எங்கூடத் துணையாக வந்தவரே

நிழலோட அரும வெயிலுலதான் தெரியுமுன்னு
பலமுறைநீ சொன்னப்போ படிக்கலயே நான்உன்ன
நீயில்லா நேரத்துல நிழல்கூட சொல்லிடுதே
ஆத்தாவே தாத்தாவே உன்னோட பெருமைகள
வருவாயா? வரந்தருவாயா? ஏக்கத்தோடு உம்பேரன்



செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

Tuesday, 27 September 2022

லளழகர சிறப்பு குறும்பா


தலைமாணாக்கர் அறியாமைத்/
தளையினை அகற்றித்/
தழைத்தோங்கிடச் செய்வதே கல்வி/

தலை
தளை
தழை

செந்தமிழ்ச்சுடர் அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

Monday, 26 September 2022

தெரிவை என்னும் பருவம்(பெண்)




 தித்திக்கும் தெரிவை


பெண்ணின் பருவத்துள் ஆறாம் பருவமாய்/

கண்ணின் இமைபோலக் காக்கும் பருவமாய்/ 

எண்ணியன ஈடேறும் இனிய பருவமாய்/

பண்ணினை மீட்டிடும் பருவமே தெரிவை/


இல்லறம் நுழைந்திடும் இணையிலாப் பருவமாய்/

நல்லறம் நோக்கிய நலமிகு பருவமாய்/

இல்வாழ்வில் விருந்தோம்பலில் இனிமை சேர்த்து/

எல்லோரையும் மகிழ்விக்கும் ஈடிலாப் பருவம்/


தாயாய் நின்றே தரணியைத் தாங்கிடவும்/

தாரமாய் நின்று தளர்வினைப் போக்கிடவும்/

சேயினை ஈன்றவள் சீர்பெறச் செய்திடவும்/

சோர்வினைப் போக்கியே சுகந்தரும் தெரிவை/


அன்பும் அறனும் உடையதோர் இல்வாழ்வைப்/

பண்பும் பயனுமாய்ப் பொலிவுறச் செய்துநல்/

இன்பம் பொங்கிடும் இல்லறத்தின் இளமையாம்/ 

தெரிவையைப் பாடுவோம் புகழ்மாலை சூடுவோம்/


செந்தமிழ்ச்சுடர்

அ.செலஸ்டின் மகிமை ராஜ்

வேம்பார்

Sunday, 25 September 2022

ஏழையின் சிரிப்பினில்...


*ஏழையின் சிரிப்பில்...*

உண்டிட உணவிலாது உருக்குலைந்த மானிடரைக்/
கண்டிட நேர்ந்திடின் கருணையுடை மாந்தராய்/
பண்டியை நிரப்பிநாம் பசியாவது போக்கினால்/
எண்ணிலாக் களிப்பினை ஏழையிடம் காணலாம்/

உடுத்திட உடையிலாது ஊறுவிளைக்கும் சமயங்கள்/
படுத்திட இடமில்லாத பகல்காணும் இரவுகள்/
விடுத்திட அழைப்பிலாத வீதிகாணும் பொழுதுகள்/
தடுத்தாள வாய்த்திடின் தடைசெய்ய வேண்டுமே/

பணமிலா கணத்தினைப் பாரினில் கண்டிட்டால்/
மணமிலா வாழ்வதனை மணங்கூட்ட எண்ணியே/
குணந்தனை மெருகூட்டி குவலயத்தில் விழிகூட்டும்/
பாணர்களின் இறைவனாம் பாரியாக மாறுவோம்/

கல்வியுடன் செல்வமும் கண்டிடா ஏழையர்/
நல்லறிவு பெற்றுநாளும் நானிலத்தில் ஒளிரவே/
எல்லோரும் வழிகூட்டி ஏழைகளை மகிழ்வூட்டி/
எல்லையிலா வரங்காண இறைவனையும் வேண்டிடுவோம்/

செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

காந்தக் குரலோனுக்குக் கவிதாஞ்சலி


என்னோடு பாட்டுப் பாடுங்கள்

காந்தக் குரலினால் கேட்போரை ஈர்த்து
சாந்தம் மிகப்பெற்று சங்கதியும் சேர்த்து
தீந்தமிழ் சொல்லிலே திகட்டா இசைகோத்து
மாந்திட வழிகூட்டிய மன்னவரே மணியரே

அம்மாவின் அன்பையும் அரவணைக்கும் பண்பையும்
இம்மாநிலம் உரைத்ததோ இனியநும் குரலிசையே
எம்மாந்தர் கேட்டாலும் ஏந்திநின்று இதயத்திலே
கும்மாளம் இடச்செய்யும் குதூகலக் குரலோனே

இசைக்கு மயங்கார் இவ்வுலகில் இல்லையென
இசைகூட்டிய சொல்வளம் இனியவனே உனதன்றோ!
திசைமாறிய பறவைக்கும் தித்தித்த உனதுகுரல்
பசைகூட்டி வாழ்வினிலே பற்றுகொள்ளச் செய்ததுவே

தேனினும் இனியநல் திருவாசகம் அனையவே
வானினும் உயர்ந்தோங்கிய வனப்புமிகு இசையாலே
வையக்கத்துள் வாழ்ந்துவரும் வனப்புமிகு வான்நிலவே
வையகம் உள்ளவரை வாழ்வாங்கு வாழியவே


செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

Saturday, 24 September 2022

என்ன தவம் செய்தேனோ

 


என்னதவம் செய்தேனோ.!

பள்ளிக்காலம் முடிந்து பாரினில் எழுந்து/
தெள்ளிய சிந்தனையால் திசைதேடிச் சென்று/
முள்ளான பாதைகளில் முட்டியினால் தவழ்ந்து/
வெள்ளிடை மலையென வியனுலகில் சிறந்திடவே/

கல்வியைக் கரம்பற்றி கரையிலா நூல்கற்று/
வல்வினை ஓட்டியே வலியதோர் நிலைநாட்டி/
அல்லல்கள் நீக்கிடவே அறிவினைக் கைக்கொண்டு/
நல்லதோர் நிலைகண்ட நலவாழ்வு மிகவுண்டு/

தீயினிலே மிகவுழன்று தேநீரும் விற்றலைந்து/
தீயணைப்புத் துறைதனிலே தீநாவின் சுற்றளந்து/
தீயினாற் சுட்டிடா திறமிகு சொல்வன்மை/
சேயிடை கூறிடவே சீர்மிகு ஆசானானேன்/

குடிசையிலே பிறந்து கோபுரமாய் நிமிர்ந்து/
விடியுநிலை தெரிந்து வியனுலகில் சிறந்து/
துடிப்பாக எழுந்திட்டு துயரங்கள் மறந்து/
பிடிப்பிலாது எழுந்திட என்னதவம் செய்தேனோ.?/

செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்