Friday, 23 September 2022

நீடுதுயில் நீக்கவந்த நிலா


 

நீடுதுயில் நீக்கவந்த நிலா


பாட்டுக்கொரு புலவனாய் பாரினில் உதித்து/

ஏட்டுக்குநற் கவிஞனாய் எழிலாய் எழுந்து/

நாட்டுக்கொரு தலைவனாய் நிமிர்ந்தே சிறந்து/

நாட்டினார் புகழ்க்கொடி நற்றமிழால் நல்லபடி/


அறியாமை நீங்கிடவே ஆற்றல்மிகு சொல்லோவியம்/

செறிவாகத் தந்தவரே சீற்றமுடன் உரைத்தவரே/

குறிபார்த்துப் பெண்ணினத்தை கூட்டுக்குள் அடைத்தோரை/

வெறிகொண்டு விரட்டிடவே வண்டமிழ் பகர்ந்தவரே/


தளைதனில் சிக்கிநின்ற தீந்தமிழின் வீரியத்தைத்/

துளைமீண்டு தென்றலாய்த் தேனூறும் இசையாக/

முளைத்திட முட்டிநிற்கும் முற்றியதோர் விதையாக/

விளைந்தநற் புதுக்கவியாய் வியனுலகில் படைத்தவரே/


எண்ணத்தைக் காவியமாய் ஏத்திடும் எல்லோரையும்/

திண்ணிய நெஞ்சுடனே தீரமிக்க கவிவடிக்கப்/

பண்ணிய பாவலனே பைந்தமிழ்ச் சூரியனே/

எண்ணிலாக் கவிகளின்று எழுதுவதே உன்ஒளியில்... /


செந்தமிழ்ச்சுடர்

அ.செலஸ்டின் மகிமை ராஜ்

வேம்பார்

குறும்பா


 

கோபுரக் கவிதை


ஆகாயக்குடையுள்/
ஆக்கிரமித்த இருளகற்றி/
ஆட்சிசெய்யக் கடுகிவா கதிரவனே/
ஆற்றல்மிகு கரங்காண/
ஆவலோடு/


செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

Thursday, 22 September 2022

சிலந்தி வலை


உறைவிடத்தால் உணவுகூட்டி/
ஊருக்கே முயற்சிகூட்டி/
பகிர்தலையும் புவிக்கூட்டும் பட்டுச்சிலந்தி/

அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

அமைதி வேண்டி


பெருவிரலாய்ப் பிரிந்திடாது/
சிறுவிரலாய் ஒன்றுவோம்/
அமைதி நம்மிலிருந்து அகிலத்திற்கு...

அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

ஓட்டந்தொலைத்து ஒயிலாக வாழ்வோம்



*ஓட்டந்தொலைத்து ஒயிலாக வாழ்வோம்!*

ஆடியடங்கும் வாழ்க்கையையும் ஆறடி நிலத்தையும்/
நாடியிருக்கும் மாந்தரினம் நலமிகு வாழ்வழித்து/
ஓடியோடிப் பொருள்தேடி உருக்குலைந்து மீண்டிடாது/
கோடிநாடி ஓடுகின்ற களங்கமதை  என்செய்வோம்?/

இளமையைத் தொலைத்திட்டு இன்பமதை விடுவித்து/
வளமைமிகு வாழ்வதை வாடிடவே செய்திட்டு/
களம்பல கண்டாங்கே கருணையும் தொலைத்திட்டு/
உளநோயால்  ஓய்ந்திட்டு உட்காரா நிலையேனோ?/

வாழ்ந்திடும் ஒருமுறை வனப்புடைய வாழ்வுடன்/
தாழ்ந்திடும் நிலையிலும் தலைபணியா நடையுடன்/
வீழ்ந்திடும் நிலையிலும் வியத்தகு சீர்கூட்டும்/
சூழ்நிலைச் சிறப்பினை சூழ்கடலும் போற்றுமே.! /

தனந்தனைத் தேடித்தேடி தினந்தோறும் பரிதவிக்கும்/
மனந்தனை விட்டோடி மணங்கமழ் வாழ்வதை/
தினந்தினம் வாழ்ந்திட தித்திக்கும் ஆள்கையை/
மனந்தனில் ஏற்றுவோம் மாண்புகழ் சாற்றுவோம்! 

செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

சங்கத்தமிழ்ச் செல்வம்


*சங்கத் தமிழ்ச் செல்வம்*

வங்கக் கடலின் வனப்பிடை உதித்து/
 சிங்கம் அனையவே சீர்பெற்றுச் சிறந்து/
தங்கம் போலவே தணலிலும் உறைந்து/
எங்கும் நிறைபவள் எங்கள் தமிழ்த்தாய்/

முச்சங்கம் பிறந்து மூவேந்தரிடை வளர்ந்து/
எச்சங்கத் துள்ளும் எதிர்வாதம் புரிந்து/
கச்சிதமாய் எழுந்து காசினியில் நிமிர்ந்து/
 உச்சிநின்று ஒளிகூட்டி உலகாளும் சங்கத்தமிழ்/

பதிற்றுப் பத்துடன் புறநானூறாய்ப் புறங்கொண்டு/
அதிசிறந்த நற்றிணையொடு ஐந்துநூல் அகங்கொண்டு/
பதிசிறந்த சேயோனுடன் பரிபாடலில் இருபொருளும்/
கதியாகப் பெற்றதே கவின்மிகு எட்டுத்தொகை/

ஆற்றொணா மாந்தரை ஆற்றிடவே எழுந்திட்ட/
ஆற்றுப்படை நூல்களொடு ஐயிரண்டு பாட்டாகத்/
தோற்றமுடை பத்துப்பாட்டாய்த்  திக்கெட்டும் புகழ்கொண்ட/
ஏற்றமுடை எங்கள்தமிழ் என்றென்றும் வாழியவே! 


செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்