Wednesday, 16 November 2022

ஊக்கமது கைவிடேல்

 


*ஊக்கமது கைவிடேல்*

ஆயிரம் தோற்ற அபூர்வ மனிதர்/

பாயிரம் போற்றப் படைத்த புனிதர்/

சாய்தல் கண்டு சோர்ந்து போயின்/

ஓய்தல் ஒன்றே உறையுள் ஆகும்/


உள்ளிருந் துடைபடா உலகத் துயிர்கள்/

வெள்ளிடை மலையாய் வெற்றி காணா/

தெள்ளிய சிந்தனையும் தீர்க்க முடிவுமே/

துள்ளிய வெற்றியைத் துவளாது தந்திடும்/


கடைசி அடிக்குமுன் கடலளவு பட்டாலும்/

படைப்பின் ஓவியமாய் பாங்குடை சிலைவாரா/

துடைத்து விடைத்தெழு துளியும் பலனாகும்/

மடைஉடை வெள்ளமாய் மங்காப் புகழ்சேரும்/


முயற்சிகை விட்டாலும் முயற்சி கைவிடாமலே/

பயிற்சியும் பாங்குடை புதியநல் முயற்சியோடே/

அயர்ச்சியைப் போக்கினால் அகிலமே ஆளலாம்/

தயக்கமதை நீக்கியே தரணியும் வெல்லலாம்/


செந்தமிழ்ச்சுடர் அ.செலஸ்டின் மகிமை ராஜ்

வேம்பார்

கருவேல மரம்

 


நீர்தேடி நிலந்தனில் நெடுந்தொலை சென்றங்கே/
வேர்கூடி நீரினையே வியத்தக்க மேலேற்றி/
பார்தணிக்கப் பகிர்ந்திடு பண்புடை *கருவேலம்*/
சீர்கொண்ட பணக்காரர் செய்திடுவார் கருவூலம்/

அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்

Friday, 4 November 2022

விந்தைமிகு வியாழன்

 விந்தைமிகு வியாழன்

=====================

கடுகுசந்தை அரசு உயர்நிலைப்பளளியின் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்களுக்குப் புதிய மனிதர் ஒருவர் ஆசிரியர்களோடு கலந்து நின்றார். வழக்கமான காலை வழிபாட்டுக் கூட்டம் நிறைவுபெற்று, அந்த வாரத்தில் தினமலர் பட்டம் இதழுக்கான வினாடிவினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவச் செல்வங்களுக்கான புத்தகப்பரிசு வழங்கிட தமிழாசிரியர் அழைத்தபோதுதான் அனைவருக்கும் வியப்பு காத்திருந்தது...  ஆம்..  பரிசு வழங்கிட மேடைக்கு வருகை புரிந்தவர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்திரு.ஜானி டாம் வர்கீஸ் அவர்கள்... 

வினாடிவினா வெற்றியாளர்களுக்குப் புத்தகப் பரிசு வழங்கிய பின்னர் தலைமையாசிரியர் விஜய ராஜன் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மாவீரன் பகத்சிங் என்ற புத்தகத்தைப் பரிசாக வழங்கினார்.  தலைமையாசிரியரோடு ஆசிரியப் பெருமக்களும், அலுவலகப் பணியாளர்களும் கடுகுசந்தை பொதுமக்களும் அகமகிழ்ந்த தருணமது 

தொடர்ந்து மாணவச் செல்வங்களின் நலன் விசாரித்து,அவர்களது மழைக்கால விழிப்புணர்வு அறிவுரைகள்கூறினார் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள். தொடர்ந்து பாரத சாரண சாரணிய இயக்கம் குறித்துக் கேட்டறிந்து,அதன் குறிக்கோள் என்னவென மாணவர்களிடம் கேட்டார். "எப்பொழுதும் தயாராயிரு" என்ற குறிக்கோளினை மாணவர்கள் கூறியதும் அதனைச் சார்ந்து மாணவர்களோடு உரையாடி, காலை வழிபாட்டுக் கூட்டத்தில் சிறப்பித்த மாணவச் செல்வங்களையும் பாராட்டினார்.மகிழ்வோடு மதியத்தில் நடைபெற்ற குழு ஆய்விற்காகக் காத்திருந்தோம். குழு ஆய்வினையும் சிறப்பாக எதிர்கொண்டு வாழ்த்துப்பெற்ற 03.11.2022 வியாழன் வியப்பு மிகுந்ததாய் வெற்றிகரமான நாளாக அமைந்திருந்தது.

இறைவனுக்கு நன்றி💐🙏