Friday, 8 May 2020

மூன்றாம் உலகப் போர் - அனுபவம்

மூன்றாம் உலகப்போர்
கவிப்பேரரசு - வைரமுத்து

இயற்கையோடு மனிதர்கள் நடத்தும் போர்...
நிலத்தோடு, நீரோடு, காற்றோடு நடத்தும் போர்...
கல்லில் முட்டினால் வலி யாருக்கு...?
கல்லுக்கு இல்லையே...
அதுபோலத்தான் #இயற்கையும்...
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த விவசாயி தற்கொலைகளுக்குக் காரணம்

#புவிவெப்பமாதல்
#தாராளமயமாக்கல்
#தனியார்மயமாக்கல்

நம்ப முடிகிறதா... ?

விவசாயிகளின் வாழ்வை அவலங்களை அழகுற வடித்து, முன்மாதிரி கிராமம் உருவாக்கி, இந்தியாவின் முதுகெலும்பை(கிராமம்)  நிமிரச் செய்து, எதிர்கால விவசாயி, விவசாயம் எப்படி இருக்கவேண்டுமென இலட்சியக் கருத்துகளை விதைத்துள்ளார் #கவிப்பேரரசு_வைரமுத்து_அவர்கள்...

கருத்தமாயி-சிட்டம்மா தம்பதியினரின் அட்டணம்பட்டி கிராமத்து விவசாய வாழ்க்கை... மகன் முத்துமணியின் கேடுகெட்ட வாழ்க்கை...  மகன் சின்னப்பாண்டியின் (விவசாயக் கல்லூரி மாணவன்) முன்மாதிரி வாழ்க்கை...  அவனுக்கு தூண்டுகோலாக அமரிக்கப்பெண் எமிலி, சப்பானிய இளைஞன் இஷிமுரா..,  கிராமத்து வாழ்க்கையூடே அகில உலகையும் அளந்துகாட்டுகிறார் கவிப்பேரரசு...

பூமிய சாமின்னு சொல்லும் நாமதான் ரசாயன உரம் போட்டு சாமியவே கொல்லுறோம்.. .
வெடிகுண்டு தயாரிப்பில் மிச்சப்பட்ட உப்புகளை கொட்டுவதற்கு உருவாக்கப்பட்ட மண்சந்தை முதல் மண்புழு உரம் தயாரித்தலில் ஒவ்வொரு படிநிலையும் மிக நேர்த்தியாக ...

விவசாயி, விவசாயத்தை நேசிப்போர் அனைவருக்கும் இந்நூல் ஓர் கலைக் களஞ்சியம்...

முதல் 150 பக்கங்கள் படிக்க 7 நாட்களும் அடுத்த 250 பக்கங்கள் படிக்க ஒருநாள் முழுமையும்... படிக்கப்படிக்க அவ்வளவு ஈர்ப்பு...

சொந்த நூல்கள் படிக்கையில் இருக்கும் வேகத்தைவிட, இரவல்நூல் அதிக வேகமெடுக்கிறது...

இரவல் தந்த அண்ணன் #அ.தி.தாமஸ் அவர்களுக்கு நன்றி...

நீங்களும் வாய்ப்பு இருந்தால் நிச்சயம் ஒருமுறையாவது #மூன்றாம்_உலகப்_போர் படியுங்கள்...
மீண்டும் படிக்கத் தூண்டும்...

ஓர் #வெற்றிப்படம் பார்த்த நிறைவு...

Friday, 1 May 2020

வாசிப்பை வெறுப்போம் படிப்பை நேசிப்போம்...

வாசிப்பை வெறுக்கிறேன்
படிப்பதை விரும்புகிறேன்

தனித்தமிழ் அறிவோம்

செந்தமிழ்த்தேன்
🍇🍇🍇🍇🍇🍇🍇

துளி : 65

தமிழன்பரே,
வணக்கம்.

                   Reading

என்றால் தமிழில் என்ன?

    படித்தலா? வாசித்தலா?

       He reads newspaper.

என்பதை,

"அவன் செய்தித்தாள் வாசிக்கிறான்"
என்பதா?,
"அவன் செய்தித்தாள் படிக்கிறான்"
என்பதா?

தமிழாசிரியர் சிலர் "நீ எழுந்து இதை வாசி" என்று மாணவரிடம் கூறுவதை வகுப்புகளில் கேட்கலாம்.

'வாசி' என்பது தமிழ் வினைச்சொல்லா?

தமிழர்கள் சுவடிகளைப் படித்தார்களா?வாசித்தார்களா?

அவர்கள் வாசித்திடாமல் படித்தார்கள்;ஓதினார்கள்.

 வாசித்தல் என்னும் சொல்லே தமிழில் அந்நாளில் இல்லை.

He reads book.
He studies in school.
He learns a language

மேற்கண்ட தொடர்களை,

அவன் புத்தகம் படிக்கிறான்.
அவன் பள்ளியில் பயில்கிறான்.
அவன் ஒரு மொழி கற்கிறான்.

என்று பொருத்தமாக மொழிபெயர்க்காமல்,

அவன் புத்தகம் படிக்கிறான்.
அவன் பள்ளியில் படிக்கிறான்.
அவன் ஒரு மொழி படிக்கிறான்

என்று பொதுவாகச் சொல்லிவிடுகிறோம்.

இப்படி மூன்றையும் படித்தல் என்றே வழங்கிய நமக்கு,
வேறுபடுத்திக் காட்ட வேண்டிய இடத்தில் குழப்பம் எழுகிறது.

ஒருநூலை மேலோட்டமாக,ஓசை குறைத்தோ கூட்டியோ படிக்கிறோம்.

மற்றொருநூலை
வகுப்பறையில் பலர் உடனிருக்க ஆசிரியர் உதவியுடன்
பயில்கிறோம்.

பிறிதொன்றை அரிதின் முயன்று கற்கிறோம்.


இம்மூன்று செயல்களுக்கும் ஆங்கிலத்தில் வெவ்வேறு சொற்கள் இருக்க,தமிழில் மட்டும் ஏன் படித்தல் என்னும் ஒரே சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இளைய தலைமுறைக்கு
ஏற்பட்டது.

நம்மிடம் இருப்பதை அறிய முயலாமல், புதுச்சொல் தேடும்போதுதான், புழைக்கடை வழியாகப் பிறமொழிச்சொற்கள் தமிழில் புகுந்து விடுகின்றன;அல்லது புகுத்தப்படுகின்றன.

அவ்வாறுதான்,
'read என்றால் வாசி'
என்று, வடமொழிச்
சொல்லொன்று இடம்பார்த்து நடப்பட்டது.

'வாசி' என்னும் வடசொல்லே வாசனை(படிப்பு வாசனை),வாசித்தல்,வாசிப்பு,வாசகம்,வாசகன்,வாசக சாலை,வாசகர் வட்டமாக விரிந்து ,'படி'யின் இடத்தைப் பிடித்ததுடன்,தமிழ்போல் நடித்தும் நிற்கிறது.

'வாசி' என்பதன் வரலாற்றைக் காண்போம்.

'வாசி' என்பதன் வேர்ச்சொல் சம்ஸ்க்ருதத்தின் வச்சஹ் - वचः - vachaH என்பதாகும்.இதன் பொருள் 'சொல்'(word)ஆகும்.

அச்சொல் நீண்டு,

வாச்சம் - वाचं - vaachaM
வாச்சஹ் - वाचः - vaachaH
வாச்சக - वाचक - vaachaka
வாச்சனாலய - वाचनालय - vAchanAlaya
வாச்சா - वाचा - vaachaa

எனப் 'பேசுபவர்' தொடர்பாக விரிந்து கொண்டே போகும்.

இங்கிருந்துதான் 'வாசி' என்ற வடமொழிச் சொல் உருவாக்கப்பட்டது.

சம்ஸ்க்ருதம் கூட 'read' எனபதை 'பட்' ( पठ् - patt) என்றுதான் கூறுகிறது.இது தமிழின் 'படி' என்பதோடு ஒத்துப்போவதும் காண்க.ஆனால், தமிழரோ வாசி என்னும் சொல்லை, வலிந்து வரவழைத்துப் பயன்படுத்தி வருவதை என் சொல்ல?

வாசி என்னும் புதுச்சொல், தமிழ்வளர்ச்சிக்கு நல்லதுதானே என்போர்,'கனி இருக்கும்போது காய் எதற்கு?' என்பதை எண்ணுதல் வேண்டும்.

வழிவழி வந்த பழந்தமிழ்ச்சொல்லை மறந்துவிட்டு,
இடையில் புகுந்த வடமொழிச்சொல்லை விரும்புதல் மடமை அல்லவா?

வழிவழிவந்த பழஞ்சொல் எது?

இலக்கணம் கண்ட தமிழர் வாழ்வில் 'ஓதல் பிரிவு' என்று ஒன்று உண்டு.

"ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன" - தொல்காப்பியம்.

தலைமகன் கல்வி கற்பதற்காகத் தலைமகளைப் பிரிந்து செல்வது ஓதல்பிரிவு.

அந்நாட்களில் சுவடிகளை உரக்கப் படித்தல் வழியாகக் கற்றதாலேயே கல்வி, 'ஓதல்' எனப்பட்டது.

நீதிநூல்களும் நூல்களை வாய்விட்டுப்
படிப்பதை 'ஓதுதல்' என்றே கூறுகின்றன.

'ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்' - உலகநீதி.
"ஓதுவது ஒழியேல்" - ஆத்திசூடி.

மேலும்,சமயங்களும் வாய்விட்டுப் படிப்பதை ஓதுதல் என்றே குறிக்கின்றன.

நான்மறைகள் மறையோரால் ஓதப்படுகின்றன.

சிவத்திருக்கோவில்களில் பன்னிரு திருமுறைகள் ஓதுவார்களால் ஓதப்படுகின்றன.

முகமதியர்கள் தம் சமயநூலாம் அல்குர்ஆனை ஓதவே செய்கின்றனர்.

வாய்விட்டுப் படித்தலே ஓதுதல்.வாய்க்குள்ளே படித்தலும் உண்டு.

தமிழின் உறவான கன்னடமும் read,study இரண்டையுமே 'ஓது' ( ಓದು - oOdhu) என்றே வழங்குதல் காண்க.

பிற்கால ஔவையார் ஒருவர் 'நீட்டோலை வாசியாநின்றான்' என்றார்.

அத்தகையோர் செயலால்,படித்தல்,ஓதுதலின் இடத்தை 'வாசித்தல்' பிடித்துக் கொண்டது.

இவ்வரலாற்றைத் தெரிந்து கொண்ட நாம்,இனிமேலாவது வாசித்தலை மறுத்துப் படித்தலைப் பாராட்டுவோம்.ஓதலையும் காதலுடன் பயன்படுத்துவோம்.

எழுதுபவனைப் படைப்பாளி என்பதுபோல், வாசகனைப் படிப்பாளி என்றும் வாசகசாலையைப் படிப்பகம் என்றும் வழங்கிடத் தமிழின் கறை விலகும்.

 Reading,Studying,ஆகிய இரண்டையுமே, 'படித்தல்' என்னும் ஒற்றைச்சொல்லால் குறிப்பதால் ஒன்றும் குறைந்து விடாது.

ஆனால்,Reading என்பதற்குப் படித்தல், ஓதுதல் என்பனவற்றை மறந்து,வாசித்தல் என்னும் வேற்றுமொழிச் சொல்லைப் பயன்படுத்தினால்,தமிழின் தூய்மையும் சீர்மையும் குன்றுவது உறுதி.

நன்றி.

              அன்புடன்,
        மனோ.சேவியர்,
            மணப்பாடு,
            01.05.2020.